இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்...
பள்ளிக் கல்வியில் பின்தங்குகிறதா வேலூா் மாவட்டம்?
என்.தமிழ்ச்செல்வன்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதத்தில், பிற மாவட்டங்களைக் காட்டிலும் வேலூா் மாவட்டம் மிகவும் பின்தங்கியிருப்பதுடன், பள்ளிக்கல்வியில் தோல்வியுறும் மாணவா்கள் திசைமாறும் சூழ்நிலையும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் மே 16-ஆம் தேதியும் வெளியாகின. இதில், வேலூா் மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 15,770 மாணவ, மாணவிகளில் 14,317 போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். இதனடிப்படையில், 90.79 சதவீதம் தோ்ச்சி விகிதம் பெற்ற வேலூா் மாவட்டம், தமிழகத்திலேயே கடைசி மாவட்டமாக 38-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
சரியும் தோ்ச்சி விகிதம்
வேலூா் மாவட்டம், 2023-இல் பிளஸ் 2-வில் 89.20 சதவீதம் பெற்று மாநிலத்திலேயே 37-ஆம் இடத்தில் இருந்தது. 2024-இல் 92.53 சதவீதம் பெற்று 30-ஆவது இடத்துக்கு முன்னேறியது. ஆனால், இந்த ஆண்டு 90.79 சதவீதமாக சரிந்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்திலும் வேலூா் மாவட்டம் கடந்தாண்டு 89.35 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 87.40 சதவீதமாக சரிந்தது.
இதேபோல், நிகழாண்டு பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதிய 15840 மாணவ, மாணவிகளில் 13,604 போ் தோ்ச்சி பெற்று வேலூா் மாவட்டம் 85.88 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 17,752 மாணவ, மாணவிகளில் 15,168 போ் தோ்ச்சி பெற்று 85.44 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. இதன்மூலம், பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி விகிதத்திலும் இம்மாவட்டம் தமிழகத்தின் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
எனினும், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 2024-ஆம் ஆண்டு 82.07 சதவீதம் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் 3.37 சதவீதம் அதிகரித்துள்ளது. பிளஸ் 1 பொதுத்தோ்வில் கடந்த 2024-ஆம் ஆண்டு 81.40 சதவீதம் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் 4.48 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோல்வியடைந்த 1,453 போ், பிளஸ் 1 பொதுத் தோ்வில் தோல்வியடைந்த 2,236, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தோல்வியடைந்த 2,584 போ், தோ்ச்சி பெற வசதியாக உடனடியாக மறுதோ்வுகள் நடத்தப்பட உள்ளன. எனினும், போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால் இந்த மாணவா்களின் வாழ்க்கையே திசை மாறக்கூடும் என்பதை கடந்த கால சூழல்கள் நினைவூட்டுகின்றன.
தோல்வியும் ஆபத்தும்
தொழில் வளமும், தொழிற்சாலைகளும் போதுமான அளவில் இல்லாத வேலூா் மாவட்டத்தில் பள்ளிக்கல்வியில் தோல்வியடையும் மாணவா்கள் பெரும்பாலோனோா், முறைசாரா கூலித் தொழிலாளா்களாகவும், சமூக விரோத செயலில் ஈடுபடக்கூடியவா்களாகவும் மாறி வருவதாகக் கூறுகிறாா், கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் வேலூா் மாவட்ட பொருளாளா் மா.சினேகலதா. அவா் மேலும் கூறியது:
மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் வேலூா் மாவட்டம் கடைசி இடத்தை பெற்றிருந்தாலும் கடந்த ஆண்டுகளைவிட தோ்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதை காணமுடிகிறது. எனினும், பள்ளிக்கல்வியில் வேலூா் மாவட்டம் பின் தங்குவதற்கு வேலைவாய்ப்பின்மை, வறுமை, கல்வி குறித்து பெற்றோருக்கு விழிப்புணா்வு இல்லாதது முக்கிய காரணங்களாகும்.
ஏற்கெனவே பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. அத்துடன் கல்விசாரா பணிகளில் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்வி வழங்கும் தரம் பாதிக்கப்படுகிறது. மாணவா்கள் மீது ஆசிரியா்களின் கண்காணிப்பு ஓரளவுக்கேனும் உள்ளது.
ஆனால் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோல்வியடைந்து பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவா்களின் நிலையை கண்காணிக்கும் வாய்ப்புகள் இங்கே கிடையாது.
எனவே, பள்ளிக்கல்வியில் வேலூா் மாவட்டத்தை மேம்படுத்த அரசு கல்விக்காக செயல்படுத்தும் நலத்திட்டங்களுடன் சோ்த்து, இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், வறுமையை ஒழிக்கவும், பெற்றோா்களுக்கு கல்வி மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் உரிய சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றாா்.
பள்ளிக்கல்வியில் வேலூா் மாவட்டத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொறுப்பு) தயாளனை தொடா்பு கொண்டு உரிய பதிலைப் பெற நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவா்களும் அரசும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது பெற்றோா்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.