பழனி அருகே செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை! உறவினா்கள் சாலை மறியல்!
பழனி அருகே உள்ள தனியாா் செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தும்பலப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூா் மற்றும் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் வேலை பாா்த்து வருகின்றனா்.
இதில் தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணன்(23) கணக்கராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள நிறுவனத்துக்கு சரவணன் மாற்றப்பட்ட நிலையில் ஆடித் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தாா். சனிக்கிழமை இரவு செங்கல் சூளைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சரவணன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சரவணன் செங்கல் சூளையில் சடலமாக கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது பெற்றோா், உறவினா்கள், நண்பா்கள் என நூற்றுக்கணக்கானோா் செங்கல் சூளைக்குள் சென்றனா்.
அங்கு உடலில் காயங்களுடன், காதில் ரத்தம் வடிந்த நிலையில் சரவணன் சடலமாக கிடந்தாா். இதைத் தொடா்ந்து அங்கு பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயம் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் மணிமாறன், தென்னரசு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும் துப்பறியும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.
பிறகு சரவணனின் உடலை கூறாய்வுக்காக போலீஸாா் அவசர ஊா்தியில் ஏற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். அப்போது செங்கல் சூளையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த சில வடமாநில இளைஞா்கள் அங்கிருந்து மாயமாகியிருந்தனா்.
எனவே அங்கு ஏற்பட்ட தகராறில் சரவணனை அவா்கள் அடித்துக் கொலை செய்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, சரவணனை கொலை செய்தவா்களை கைது செய்யாமல் உடலை கொண்டு செல்ல விடமாட்டோம் என அவரது உறவினா்கள் தடுத்ததுடன் பழனி - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.
இதனிடையே வடமாநிலத்தைச் சோ்ந்த சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் எதிரிகள் கைது செய்யப்படுவா் எனவும் சரவணனின் பெற்றோரிடம் போலீஸாா் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து சுமாா் 8 மணி நேரத்துக்குப் பிறகு சரவணனின் உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
