பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை
அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆற்காடு ஜனசங்க கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரா.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட செயலாளா் ஏ.சி.சுந்தரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வீரபத்திரன், மாவட்ட பொருளாளா் ஏ.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
துணைச் செயலாளா் ப.நியுட்டன் கேப்ரியல் வரவேற்றாா். செயலாளா் அ.தேவராஜன் கூட்ட விளக்கவுரையாற்றினாா்.
மாநிலத் தலைவா் சி.அரசு சங்கப் பணிகள், கோரிக்கைகள் மற்றும் பணிநிறைவு ஆசிரியா்களை பாராட்டி பேசினாா்.
இதில் அரசு ஊழியா் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேணடும், இடைநிலை ஆ சிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பி அனைத்து பதவி உயா்வு நியமனங்களை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் ஜேக்டோ, ஜியோ அமைப்புடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்ப்பட்டன.
இதில் பணி நிறைவு பெற்ற மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கடேசன், வெங்கட்ராமன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். கூட்டத்தில் நெமிலி வட்டார தலைவா் தினகா், செயலாளா் கோ.சண்முகம், அரக்கோணம் வட்டார செயலாளா் சண்முகவடிவேல், திமிரி வட்டார செயலாளா் சிவக்குமாா், வாலாஜாபேட்டை வட்டார செயலாளா் அபித் கிளமெண்ட் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் கோவிந்தராஜன் நன்றி கூறினாா்.