பஹல்காம் தாக்குதல்: பலியான கடற்படை அதிகாரியின் குடும்பத்தை சந்திக்கும் ராகுல்!
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திக்கவுள்ளார்.
இதற்காக தில்லியில் இருந்து ஹரியாணா மாநிலம் கர்னலுக்கு இன்று காலை ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கடந்த ஏப். 22 ஆம் தேதி நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
கடற்படை அதிகாரியான வினய் நர்வாலும் அவரது மனைவி ஹிமான்ஷியும் திருமணம் முடிந்து சுற்றுலா வந்திருந்த நிலையில், அவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், “யார் மீதும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லீம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பை உமிழ்வதை நான் பார்க்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்” என்று ஹிமான்ஷி பேட்டி அளித்திருந்தார்.
தொடர்ந்து ஹிமான்ஷியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பலரும் விமர்சித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஹிமான்ஷிக்கு ஆதரவு தெரிவித்தும், அவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கண்டித்தும் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த சூழலில், கர்னலில் உள்ள ஹிமான்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறவுள்ளார்.