பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து உஷார் நிலையில் ராஜஸ்தான்!
பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லையில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடர்ந்து ராஜஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநில அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தானின் கங்காநகர், பிகானர், ஜெய்சால்மர், பார்மர் ஆகிய எல்லை மாவட்டங்களில் உஷார் நிலையில் உள்ளதாகவும், சிறப்பு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், வதந்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம்.
முதல்வரின் நடவடிக்கையைத் தொடர்ந்து மாநிலத்தின் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். தலைமைச் செயலாளர் சுதன்ஷ் பந்த், காவல்துறை இயக்குநர் ஜெனரல் யு.ஆர். சாஹு ஆகியோருடன் முதல்வர் தொடர்ந்து தொடர்பில் உள்ளார், மேலும் மாநில அரசும் நிர்வாகமும் மிகுந்த உஷார் நிலையில் உள்ளன.
மேலும் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை முதல்வர் வரவேற்றார். மேலும் முப்படைகளையும் அவர் பாராட்டினார்.
இந்தியாவின் சார்பில் நடத்தப்படும் ஆப்ரேஷன் சிந்தூர் அனைத்து அரசியல் தலைவர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 முகாம்களை அழித்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.