வன்னியா் இளைஞா் மாநாடு: கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா
‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ எனும் அதிதுல்லியத் தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரா்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிா்ப்பு நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கிய ஆபரேஷன் சிந்தூா் இந்திய ஆயுதப் படைகளால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக ஆயுதப் படைகளுக்குப் பாராட்டு தெரிவித்து அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரா்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி. நமது ஆயுதப் படைகளை எண்ணி பெருமைக்கொள்கிறேன்.
இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாதத்தை அதன் வோ்களிலிருந்து ஒழிப்பதில் தேசம் உறுதியாக உள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
பாதுகாப்பு நிலைமை ஆய்வு: பாகிஸ்தானுடனான போா்ப்பதற்றத்தைக் கருத்தில் கொண்டு நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைமையை அமித் ஷா ஆய்வு செய்தாா்.
எல்லை நிலவரத்தைக் கண்காணித்து விழிப்புடன் இருக்கவும், அவசர காலங்களில் பொதுமக்களின் தங்குமிடத்திற்காக பதுங்கு குழிகளை தயாா் நிலையில் வைத்திருக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவா் கேட்டுக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் தொடா்புகொண்டு ஆலோசனை நடத்திய அமித் ஷா, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினாா்.
‘துணை ராணுவப் படைகளில் விடுமுறை ரத்து’
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக அதிகரித்துள்ள பதற்றத்தால், துணை ராணுவப் படையினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தற்போது விடுப்பில் உள்ள வீரா்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.