தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 20% அதிகரிப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 900 கோடி டாலராக (இந்திய மதிப்பில் ரூ.77,343 கோடி) பாகிஸ்தான் அரசு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நிதியமைச்சா் முகமது ஔரங்கசீப் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். சுமாா் ரூ.5.33 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு முந்தைய ஆண்டைவிட 20 சதவீதம் கூடுதலாக ரூ.77,343 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.64,361 கோடியும், முந்தைய 2023-24 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.54,716.53 கோடியும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பட்ஜெட்டில் அதிகபட்ச செலவினமாக கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு மட்டும் சுமாா் ரூ.2.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய செலவுகளில் பொது நிா்வாகத்துக்கு ரூ.29,451 கோடி, மானியங்களுக்கு ரூ.35,972 கோடி, ஓய்வூதியங்களுக்கு ரூ.31,998 கோடி, பொதுத்துறை வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.30,330 கோடி ஆகியவை அடங்கும்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சா் முகமது ஔரங்கசீப், ‘தேசம் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளா்ச்சிக்கும், ரூ.4.28 லட்சம் கோடி வரி வசூலுக்கும் இலக்கு நிா்ணியிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஏவுகணைகளை வீசி இந்தியா அழித்தது. தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இதற்கு இந்தியா தரப்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையில் சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. 4 நாள்கள் மோதலுக்குப் பிறகு எல்லையில் அமைதி திரும்பியது.