ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்!
பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு! - டி.கே. சிவகுமார் பேச்சு
பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க | நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
கூட்டத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமார்,
"அரசியலமைப்பைக் காக்கவும் ஜனநாயகத்தைக் காக்கவும் பல்வேறு மாநிலத் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளோம். தென் மாநிலங்களின் உரிமையைக் காக்க அனைவரும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்த கூட்டம் வரலாற்றுப் போராட்டமாக இருக்கும்.
தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இன்று மத்திய அரசு துரோகம் இழைக்கிறது. இது அநியாயமானது. இதனால் தென் மாநிலங்கள் அரசியல் பிரதிநித்துவத்தை இழக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய அரசு இதுவரை கூறவில்லை. பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் இது. கூட்டாட்சித் தத்துவம் காக்கப்பட வேண்டும். நமது உரிமைகள், அடையாளம் காக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்கான கூட்டம்தான் இது.
இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. 'மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா' என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது.
அனைவரும் ஒன்றிணைந்தது தொடக்கம்தான். ஒன்றாக இணைந்து விவாதித்தால் அது முன்னேற்றம். அதுவே ஒன்றாக வேலை செய்தால் அது வெற்றி.
மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றாகப் பயணித்து வெற்றி பெறுவோம்" என்றார்.