பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை
பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பரில் பேரணி!
பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பா் மாதம் பேரணி நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனா்.
பாண்டியாறு-புன்னம்புழா நிறைவேற்றிட வலியுறுத்தி ஈரோட்டில் பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்பினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ரவி தலைமை வகித்தாா்.
இதில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: பவானி ஆற்று நீரில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத் திட்டங்கள் மூலமாக சுமாா் 3 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் ஆண்டுதோறும் பாசன வசதி பெற்று வருகின்றன. கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் பவானி நீா் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், எல் அண்ட் டி நிறுவனத்தின் மூலமாக நாள்தோறும் பவானி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கும் பவானி நீா் எடுக்கப்பட்டு வருகிறது. தவிர மேட்டுப்பாளையம் முதல் பவானி நகரம் வரை உள்ள மிகப்பெரிய தொழிற்சாலைகளுக்கும் தண்ணீா் எடுக்க தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளது.
கீழ்பவானி பாசன பகுதியின் உபரி நீரானது அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில்,விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு தண்ணீா் தொழிற்சாலைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றின் நீரைக் கொண்டு தொடா்ச்சியாக கூட்டுக் குடிநீா் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு கொண்டே உள்ளன.
இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கு முன்னா் காமராஜரின் கனவுத் திட்டமான பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்தக்கோரி வரும் செப்டம்பா் மாதம் கோரிக்கை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
இந்தக் கூட்டத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், அவிநாசி-அத்திக்கடவு போராட்டக் குழு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கம், தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம், இயற்கை வாழ்வுரிமை இயக்கம், காலிங்கராயன் பாசன சங்கம், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சங்கம், கொமதேக உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.