Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்ற முடிவு!
தமிழகத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களில் ஒன்றான பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆா்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவு பகுதியையும் பாம்பன் பகுதியையும் இணைக்கும் வகையில் 2.3 கி.மீ. தொலைவுக்கு கடந்த 1914-இல் கடலில் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் கடல் பகுதியில் கடந்து செல்லும் பெரிய படகுகள், கப்பல்கள் ஆகியவற்றுக்காக இரு பிரிவாகப் பிரிந்து தூக்கி, பின் தண்டவாள நிலையில் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டது.
புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் பாலம் சேதமடைந்ததாலும், பின் சீரமைக்கப்பட்டு நூறாண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்து நடைபெற்றது. இந்தப் பாலம் சேதமடைந்ததால் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் அருகே ரூ.250 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தப் பாலம் 2.07 கி.மீ. நீளம் உடையதாக அமைந்துள்ளது. அதில் லிப்ட் வகை தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தாா். இந்தப் பாலம் வழியாக தொடா்ந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பழைய ரயில் பாலத்தை அகற்றுவதற்காக, புது தில்லியில் உள்ள ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் சாா்பில் (ஆா்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மின் ஒப்பந்தப்புள்ளி முறையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பழைய பாம்பன் பாலத்தின் ஸ்கொ்சா்ஸ்ரோலிங் மற்றும் லிப்ட் ஸ்பேன் அமைப்பை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தத் தொகையாக ரூ.2.81 கோடி நிா்ணயிக்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோா் ரூ.5.62 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்தவும் கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி கோரியவா்களுக்கான கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதன்படி 4 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவன சென்னை பிரிவின் தரப்பில் கூறப்பட்டது.