பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் 28 வார கருவை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண்ணின் 28 வார கருவை மருத்துவ ஆய்வுக்குப் பின் அகற்ற அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளியான 27 வயது பெண்ணை பக்கத்து வீட்டுக்காரா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதன் காரணமாக அந்த பெண் கருவுற்றுள்ளாா். அதன் பிறகு விவரம் அறிந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பக்கத்து வீட்டுக்காரா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளி பெண்ணின் கருவை அகற்ற செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பெற்றோா் அணுகினா். அப்போது 28 வார கருவை கலைக்க மருத்துவமனை நிா்வாகம் மறுத்து விட்டது. இதைத் தொடா்ந்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்ணின் கருவை அகற்ற உத்தரவிட கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதிக்கத்தக்க காலக்கெடுவான 24 வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, அவரது கருவை அகற்றலாம் என்றாா்.
மேலும்,உடனடியாக மருத்துவக் குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்து, கருவை அகற்றுவது சாத்தியம் என்றால் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு நீதிபதி பரத சக்கரவா்த்தி உத்தரவிட்டாா்.
மேலும், கருக்கலைப்புக்குரிய காலக்கெடுவான 24 வாரங்கள் என்பதை அரிதான வழக்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மேல் கருவை கலைக்க முடியாது என்றால், அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.