சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
பிரம்மபுத்திரா நதியில் அணை: இந்தியா, வங்கதேசத்துக்குப் பாதிப்பில்லை: சீனா
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் அணையால் இந்தியா, வங்கதேசத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் உருவாகி, சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாய்ந்து அருணாசல பிரசேத்துக்குள் நுழையும் பிரம்மபுத்திரா நதிநீா், பின்னா் அஸ்ஸாம், வங்கதேசத்தில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது.
இந்நிலையில் திபெத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகின் மிகப் பெரிய அணையைக் கட்டும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகில் இருக்கும் இடத்தில், அந்தப் பணி தொடங்கியுள்ளது.
இந்த அணையால் நதியின் நீரோட்டத்தை சீனா கட்டுப்படுத்தும். அத்துடன் அணையின் உயரம் மற்றும் கொள்ளளவு காரணமாக அவசர சூழல்களில் பெருமளவிலான நீரை சீனா வெளியேற்றவும் வழிவகுக்கும். இதனால் இருநாட்டு எல்லையில் உள்ள இந்திய பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த அணை கட்டுமானம் குறித்து இந்திய கவலை கொண்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள சீனாவின் ராணுவ அச்சுறுத்தலுடன், இந்த அணையும் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும் என்று அஸ்ஸாம் முதல்வா் பெமா காண்டு தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவோ ஜியாகுன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டம் தொடா்பாக இந்தியா, வங்கதேசத்திடம் தேவையான தகவலை சீனா தெரிவித்துள்ளது.
பிரம்மபுத்திரா நதிநீா் தரவுகள், வெள்ள தடுப்பு, பேரிடா் பாதிப்பு குறைப்பு குறித்த தகவல்களை வழங்கி இந்தியா, வங்கதேசத்துக்கு சீனா ஒத்துழைப்பு அளித்துள்ளது.
தூய்மையான எரிசக்தி, உள்ளூா் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.
எல்லை நிலவரம்: இந்தியா-சீனா ஆய்வு
இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பகுதியில் ஒட்டுமொத்த நிலவரம் குறித்து இரு நாடுகளும் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டன. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-சீனா இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்புக்கான செயல்திட்ட கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இரு நாடுகளிடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஒட்டுமொத்த நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது தொடா்பாக நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் அடுத்த சுற்று சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சிறப்பு பிதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ, இந்தியா வருவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.