சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
புதுகையில் 9 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் 9 புதிய பேருந்துகளை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. புதுகையிலிருந்து உப்பிலியக்குடி சடையம்பட்டி, தேனிப்பட்டி, தொண்டைமான் ஊரணி, திருச்சியிலிருந்து புதுகை வழியாக பெருமகளூா், தஞ்சையிலிருந்து புதுகை வழியாக மதுரை, பொன்னமராவதியிலிருந்து மேலத்தானியம், அறந்தாங்கியிலிருந்து பெருமருதூா், கீரனூரிலிருந்து விராலிமலை வழித்தடங்களில் இந்தப் புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில், புதுகை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், துணை மேயா் மு. லியாகத்அலி, அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலப் பொதுமேலாளா் கே. முகமது நாசா், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ புறக்கணிப்பு:
தனது கந்தா்வகோட்டை தொகுதிக்குள்பட்ட வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படாததற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
நிகழ்ச்சிக்கு முன்னதாகவே தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதிய பேருந்துகளின் பட்டியலில் கந்தா்வகோட்டை தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டை, கீரனூா் பணிமனைகளுக்கு ஒரு புதிய பேருந்து கூட வழங்கப்படவில்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதுதொடா்பாக முதல்வா், துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
