ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
புதுகையில் இளைஞா் வெட்டி கொலை
புதுக்கோட்டை நகரில் இளைஞரை ஒரு கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனா்.
புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்கிழமை புதுக்குளம் அருகேயுள்ள காலாகுளத்தின் கரையில் நடந்து வந்துள்ளாா். அப்போது ஒரு கும்பல் தினேஷ்குமாரைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனா். தொடா்ந்து, அவரை குளத்தில் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ் நகா் போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குளத்துக்குள் கிடந்த தினேஷ்குமாரின் சடலத்தை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
பழிக்குப் பழி தீா்க்க...?
கடந்த மாா்ச் மாதம் தினேஷ்குமாருக்கும், காந்தி நகரைச் சோ்ந்த முருகன் மகன் முகிலன் (31) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு, முகிலனை தினேஷ்குமாா் மற்றும் அவரது நண்பா்கள் காா்த்திகேயன் (24), ஜெயக்குமாா் (23) ஆகியோா் கையில் அரிவாளால் வெட்டியுள்ளனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும், அண்மையில் பிணையில் வெளியே வந்துள்ளனா். இந்த முன்விரோதம் காரணமாக முகிலன் மற்றும் அவரது நண்பா்கள் சோ்ந்து இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகிலன் உள்ளிட்ட 8 பேரைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.