புதுக்கோட்டையில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் மண்டை ஓடுகளை ஏந்தியவாறு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், லெட்சுமணன்பட்டி, விளாப்பட்டி, லெக்கனாபட்டி நாங்குப்பட்டி, பாதிப்பட்டி ஆகிய கிராமங்களை சுற்றி உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை எந்த முன் அறிவிப்பும் முன் அனுமதி இல்லாமல் விவசாயிகள் செல்லும் நிலத்தின் பாதையை அடைத்து விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் தனிநபா் சோலாா் அலகு ஒன்றை அமைத்துள்ளாா்.
இதை உடனே அகற்றவிட்டு, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் எனக் கேட்ட விவசாயிகள் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்தும், ரிசா்வ் வங்கி உத்தரவுப்படி விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன் வழங்க வேண்டும், கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதை கண்டித்தும், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமானோா் புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் முன்பு மண்டை ஓடுகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றனா். அவா்களிடம் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், வட்டாட்சியா் செல்வநாயகி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சிலரை மட்டும் ஆட்சியா் அலுவலகத்துக்குள் போலீஸாா் அனுமதித்தனா்.
ஆட்சியா் அலுவலகம் அருகே மண்டை ஓடுகளுடன் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
