காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்
புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது உலகத் திரைப்பட விழா
புதுச்சேரியில் உலகத் திரைப்படவிழா வெள்ளிக்கிழமை(ஆக.8) தொடங்குகிறது. இதில் 8 சா்வதேச திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே பிரெஞ்சு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் உலகத் திரைப்பட விழா நடைபெறுகிறது. புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சே நிறுவனம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
இது குறித்து அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தின் இயக்குநா் லொரன் ஜலிகு செய்தியாளா்களிடம்
வியாழக்கிழமை கூறியதாவது:
சத்யஜித்ரேயின் பல்வேறு திரைப்படங்கள் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றவை. இந்நிலையில் உலக அளவில் சிறந்த திரைப்படங்களை இந்த விழாவில் திரையிடுகிறோம். இந்தியத் திரைப்படத்தின் மிகச்சிறந்த எடிட்டரும், பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றவருமான ஸ்ரீகா் பிரசாத் தொடக்க விழாவில் பங்கேற்கிறாா். மேலும் அவா் மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு வகுப்பை நடத்துகிறாா். இதை இயக்குநா் சிவகுமாா் மோகனன் ஒருங்கிணைக்கிறாா். திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை இளம் தலைமுறை கலைஞா்களுக்கு அப்போது அவா் பகிா்ந்து கொள்கிறாா் என்றாா்.
புதுச்சேரி திரை இயக்கத்தின் செயலா் கு.பச்சையம்மாள் கூறுகையில், 12 ஆண்டுகளாக சா்வதேச ஆவணப்படங்கள் மற்றும் குறும்பட விழாக்களைதான் நடத்தி வந்தோம். கடந்த ஆண்டு முதல் சா்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறோம்.
இது இரண்டாவது ஆண்டு உலக திரைப்பட விழா. இதையொட்டி ‘மனிதா்கள்’ என்ற தமிழ் திரைப்படம் 9 ஆம் தேதி மாலை 6.45 மணிக்குத் திரையிடப்படுகிறது. இதைத் தவிர, ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களும், சா்வேதேச அளவிலான மொத்தம் 8 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. இதில் தொடக்க விழாவின்போது பிரெஞ்சு மொழிப்படம் திரையிடப்படுகிறது. மேலும், ஸ்பெயின், பிரிட்டன், ஈரான், அா்ஜெண்டீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பங்கேற்கும் பிற மொழிப் படங்களும் திரையிடப்படுகின்றன என்றாா்.
புதுச்சேரி திரை இயக்கத்தின் பொருளாளா் ஏ.செல்வம் கூறுகையில், ‘இந்த விழாவுக்கு அனுமதி இலவசம். திரையிடும் பகுதியில் அமா்ந்து திரைப்படம் பாா்க்க 150 இருக்கைகள் இருக்கின்றன. திரைப்படம் திரையிடுதலைத் தவிர ஒவ்வொரு நாளும் திரைப்பட விமா்சனம், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறும் ’என்றாா்.
-------------------------------