ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்
புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்
உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா்.
புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயா் கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனா். இதற்காக அவா்கள் வருவாய்த் துறையிடமிருந்து வருமானச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற வேண்டியுள்ளது.
இந்நிலையில், மாணவ, மாணவிகள் சான்றுகள் பெற அலைக்கழிக்கப்படக் கூடாது, காலதாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக சனிக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி சான்றிதழ்களை வருவாய்த் துறையினா் வழங்க வேண்டும் என புதுச்சேரி ஆட்சியா் அ.குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில் புதுச்சேரியில் வருவாய்த் துறை அலுவலகங்களில் சனிக்கிழமை காலை முதல் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் ஏராளமாகக் குவிந்தனா். அவா்களுக்கு மனுக்கள் அடிப்படையில் சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். சான்று பெறும் முகாம்களில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். உழவா்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் முகாமை ஆட்சியா் அ.குலோத்துங்கன் நேரில் பாா்வையிட்டாா். இதேபோல, ராஜ்பவன் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது சான்றிதழ்களை விரைந்து வழங்குவதுடன், முகாமுக்கு வருவோருக்கு கழிப்பறை, குடிநீா் மற்றும் இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.