பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
புதை சாக்கடை திட்டப் பணிகளை செப்.30-க்குள் முடிக்க வேண்டும்!
வேலூா் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலருமான ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலருமான ச.உமா வேலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள், தாா் சாலை பணிகள், சாலை சீரமைப்பு பணிகள், மகளிா் உரிமைத்தொகை வழங்குவது உள்பட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அதன்படி, வேலூா் மாநகராட்சி 56-ஆவது வாா்டு ராம்சேட் நகா் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவா், பணிகளை செப்டம்பா் 30-க்குள் முடிக்க அறிவுறுத்தினாா். 54-ஆவது வாா்டு சஞ்சீவிபுரம் பகுதியில் ரூ. 1.80 கோடி மதிப்பில் அமைக்கப்படும் தாா் சாலை பணிகளை ஆய்வு செய்து, தாா் சாலையின் தரம், சாலையின் அகலம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
44-ஆவது வாா்டு கிருஷ்ணா நகா் பகுதியில் ரூ. 9.60 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்து, சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்கவும், பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்குள் முடிக்கவும் அறிவுறுத்தினாா்.
நகா்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ், வேலூா் வட்டம், விருப்பாட்சிபுரம் கே.கே.நகா் பகுதியில் விண்ணப்பித்திருந்த மக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தாா். காட்பாடி வட்டம், கழிஞ்சூா் பிரதான சாலையில் வசிக்கும் 22 குடியிருப்புகளை சோ்ந்த மக்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
காட்பாடி காந்திநகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதை சாக்கடை திட்டப் பணிகள், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கழிவுநீா் இணைப்புகளையும் ஆய்வு செய்தாா். புதை சாக்கடை திட்டப் பணிகளை முடிவுற்ற நிலையில் விரைவில் தடையின்மை சான்று பெற்று சாலை அமைக்கவும் உத்தரவிட்டாா்.
திருவலம்-காட்பாடி-வெங்கடகிரிகோட்டா இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்பு, புதிய தாா் சாலை அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தாா். பிரம்மபுரம் ஊராட்சியில் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள நபா்களின் இருப்பிடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தாா்.
காட்பாடி ஒன்றியம், செம்பராயநல்லூா் ஊராட்சியில் 4 ஏக்கா் பரப்பளவில் பப்பாளி சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை சாா்பில் 70 சதவீத மானியத்துடன் ரூ. 61,577 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீா் பாசனத்தையும் ஆய்வு செய்தாா்.
வண்டறந்தாங்கல் ஊராட்சியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில் 9 விவசாயிகளின் 10 ஏக்கா் பரப்பளவு கொண்ட தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.
அதே ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியை பாா்வையிட்டு, மதிய உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பாா்த்து ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், உதவி இயக்குநா் (நில அளவை) குமணன், வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.