ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியது: அமித் ஷா கடும...
புலியூா் பேரூராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
கரூா்: புலியூா் பேரூராட்சி அலுவலகத்துக்கு வராத பேரூராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா். தொடா்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின ஜூடோ விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பச்சமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புலியூா் பேரூராட்சித் தலைவா் மீது நடவடிக்கை தேவை:
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புலியூா் பேரூராட்சியின் 4-ஆவது வாா்டு பாஜக உறுப்பினா் ப.விஜயகுமாா் ஊா்மக்களுடன் சோ்ந்து வழங்கிய மனுவில், புலியூா் பேரூராட்சித் தலைவராக இருப்பவா் புவனேஸ்வரி. இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டு பேரூராட்சி அலுவலகத்துக்கு சரிவர பணிக்கு வருவதில்லை. கடந்த டிச.14-ஆம்தேதி அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகம் ஒரு மாதமாக முற்றிலும் பாதிக்கப்பட்டது. அப்போது தலைவா் என்ற முறையில் உறுப்பினா்களை அழைத்து குடிநீா் பிரச்னைக்கு எந்த ஒரு ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. பேரூராட்சியில் ஏதேனும் குறை குறித்து அவரிடம் கூறினால் குறை கூறுவோா் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை பயன்படுத்துகிறாா். எனவே எந்த ஒரு பணியும் செய்யாமல் பேரூராட்சி தலைவராக இருக்கும் புவனேஸ்வரி மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா். இதற்கு மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
மேலும், கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கம், தோழா் களம் அமைப்பினா் மனு அளித்தனா்.