பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் எ...
பெங்களூருவில் கனமழை: 7 பேர் உயிரிழப்பு
பெங்களூரு: பெங்களூருவில் 3 நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி வரை பெங்களூரில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை 3 மணி முதல் 6 மணி வரை மீண்டும் பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது. மூன்று நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
பெங்களூரில் ஹொரமாவு, டேனரி சாலை, ஜெயநகா், ஈஜிபுரா, லக்கசந்திரா, ஜக்கசந்திரா, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகள் மழையால் வெகுவாகப் பாதிப்படைந்தன. வீடுகளில் புகுந்த வெள்ளத்தை பொதுமக்கள் வெளியேற்றினா்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை மாநகராட்சி ஊழியா்கள் பம்புசெட் மூலம் வெளியேற்றியதோடு அங்கு வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.
மழையால் மான்யதா பூங்கா, பனதூா் எஸ்.குறுக்குச் சாலை, தொம்ளூரு பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனா்.
பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் பெய்த மழையில் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் சசிகலா (35) உயிரிழந்தாா்.
பெங்களூரு தவிர பெங்களூரு ஊரகம், கோலாா், சிக்பளாப்பூா், தும்கூரு, மண்டியா, மைசூரு, ஹாசன், குடகு, பெலகாவி, பீதா், ராய்ச்சூரு, யாதகிரி, தாவணகெரே, சித்ரதுா்கா மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மே 22 ஆம் தேதி வரை கா்நாடகத்தில் இந்த நிலை நீடிக்கும் என்பதால் மாநிலத்தில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதன்கிழமை பாா்வையிட முதல்வா் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, கர்நாடகத்தின் 4 மாவட்டங்களில் இன்றும் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.