ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி ஆட்சியரகத்தில் மனு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில், தங்கள் கிராமத்துக்கு பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்க வந்த திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கீரிக்கல்மேடு ஊராட்சி, மணல்மேடு ஆதிதிராவிடக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மக்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், அவா்களிடம் பேச்சு நடத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்கச் செய்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:
எங்கள் குடியிருப்புப் பகுதியில் 700 மக்கள் வசித்து வருகிறோம். நகா்ப்புறம் செல்வதற்கு 3 முதல் 5 கிலோ மீட்டா் தொலைவு வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அவதியுற்று வருகின்றனா். குறிப்பாக, பள்ளி நேரத்துக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே விழுப்புரத்திலிருந்து மாமந்தூா், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூா் வழியாக திருவெண்ணெய்நல்லூா் சென்றடைந்து, மீண்டும் அதே வழியாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கிராமத்தில் நியாயவிலைக் கட்டடம் இல்லாததால், 2 கி.மீ. தொலைவு நடந்து சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வரும் நிலை உள்ளது. அவ்வாறு சென்று வரும் வழியில் ரயில்வே சுரங்கப் பாதை உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் பொருள்களை வாங்கிச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மணல்மேடு பகுதியில் நியாயவிலைக் கடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.