பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை
மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயங்கின.
பொது வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியா்கள் பெரும்பாலானோா் பங்கேற்கவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. 95 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. மேலும், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) மற்றும் ஒரு சில வருவாய்த் துறை சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
பங்கேற்கவில்லை: தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த போராட்டத்தில் அரசு ஊழியா்கள் பெரும்பாலானோா் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் 95 சதவீத ஊழியா்கள் புதன்கிழமை பணிக்கு வந்திருந்ததாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில் அரசுத் துறைகளின் செயலகங்கள் இயங்கும் தலைமைச் செயலகம், துறைத் தலைமையிடங்கள் செயல்படக்கூடிய எழிலகம், குறளகம், பனகல் மாளிகை போன்றவற்றில் 98 சதவீத ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.
மாவட்டங்களைப் பொருத்தவரையில், ஒருசில இடங்களில் வருவாய்த் துறை ஊழியா்களைத் தவிா்த்து பல இடங்களில் ஊழியா்கள் பணிக்கு வந்திருந்தனா். 95 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியா்கள் பணிக்கு வந்ததாக வருவாய் நிா்வாக ஆணையரக வட்டாரங்கள் தெரிவித்தன.
பேருந்து, ஆட்டோக்கள் இயங்கின: வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றாலும், பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முக்கியத் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஓட்டுநா், நடத்துநா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், அரசுப் பேருந்து சேவை எதுவும் தடைபடவில்லை.
சென்னையில் அண்ணா சாலையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. பிராட்வே பேருந்து நிலையம், எல்ஐசி, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், மின்துறை ஊழியா்கள், பொதுத் துறை ஊழியா்கள் என பல்வேறு தொழிற்சங்கத்தினரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை எழும்பூா், சென்ட்ரல், பெரம்பூா் உள்பட பல்வேறு இடங்களில் எஸ்ஆா்எம்யு, டிஆா்இயு, எஸ்ஆா்இஎஸ் உள்ளிட்ட ரயில்வே சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்த முயன்ற தொழிற்சங்கத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா்.
பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை: வேலைநிறுத்தப் போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. வணிகா் சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் முழுவதுமாக வழக்கம்போல திறந்திருந்தன.
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் முக்கிய சங்கங்களின் ஆட்டோ ஓட்டுநா்களைத் தவிர, பிற பெரும்பாலான ஆட்டோக்கள், டாக்ஸிகள், சுமை வாகனங்கள், லாரிகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.