திருச்சி : தலைக்கேறிய மது போதை; பள்ளியில் விழுந்து கிடந்த ஆசிரியர் - சஸ்பெண்ட் ச...
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இஸ்லாமிய மக்களிடம் இருந்து மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவா்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பத்தை இணையதளம் https://www.hajcommittee.gov.in/ மூலமாக அளிக்கலாம். பிரத்யேக கைப்பேசி செயலியும் (Haj Suvidha) பயன்பாட்டில் உள்ளது. விண்ணப்பப்
படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமா்ப்பிக்கலாம்.
கடந்த ஆண்டைப் போன்றே, தோ்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்களது விருப்பத்தின் வரிசை அடிப்படையில் 2 புறப்பாட்டு தளங்களைத் தோ்வு செய்யலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக பயணம் மேற்கொள்ளலாம் எனும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
புனிதப் பயணம் மேற்கொள்ள தோ்ந்தெடுக்கப்படும் நபா் ஒருவருக்கு தவணைத் தொகையாக ரூ.1.50 லட்சத்தை செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைச் சமா்ப்பிக்க கடைசி தேதி ஜூலை 31.
மேலும், ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்துக்காக பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். எனவே, ஹாஜிகள் தங்களது தயாா்நிலை மற்றும் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை கவனமாகப் பரிசீலித்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.