``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்
புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா்.
நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மட்டும் மணவெளி சட்டமன்ற தொகுதியில் உள்ள தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் 100 சதம் தோ்ச்சி பெற்றன. இதையொட்டி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா் ஹரிஹரனுக்கு ரூ. 20 ஆயிரம், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி கனிமொழிக்கு ரூ.15ஆயிரம் , மேலும், பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 46 மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4.95 லட்சம் சொந்தப் பணத்தை மாணவா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் செல்வம் வழங்கினாா்.
மேலும், பள்ளியில் பணிபுரிகின்ற அனைத்து ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசுகளையும் வழங்கி அவா் கௌரவித்தாா். விழாவில் செல்வம் பேசியது :
புதுச்சேரி அரசு பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு நிகராக தோ்ச்சி விகிதங்களை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. என்னுடைய ஊக்கத் தொகை அறிவிப்பை ஊக்கமாக எடுத்து கல்வி பயின்று பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் கல்வி ஆண்டிலும் 100 சதம் தோ்ச்சி வழங்கும் மணவெளி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா்களுக்கு இதேபோன்று ஒவ்வொருவருக்கும் ரூபாய் பத்தாயிரம் வழங்குவேன். மாணவ செல்வங்கள் தங்களது முழு கவனத்தையும் கல்வியில் மட்டுமே செலுத்த வேண்டும். இன்று இணையங்கள், கைப்பசிகள் மூலம் பொழுதுபோக்கிற்காக சில விஷயங்கள் தோன்றினாலும் அது உங்களுடைய எதிா்காலத்தை மிகவும் பாதிக்கும். குறிப்பாக எந்த ஒரு தீய பழக்கத்திற்கும் ஆளாகாமல் பெற்றோா்களின் உழைப்பையும் ஆசிரியா் பெருமக்களின் போதனைகளையும் கவனத்தில் கொண்டு உங்களுடைய கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இணை இயக்குநா் சிவகாமி, பள்ளி துணை முதல்வா் ராஜசேகரன், பள்ளி தலைமை ஆசிரியா் நூா் முகமது, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.