போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பாலையூா் கிராமம், கருவியாப்பாட்டி தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் மணிகண்டன் (29). சிற்பியான இவா் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளத்தூா் கிராமத்தில் தங்கி கோயிலில் சிற்ப வேலை செய்துவந்தாா். இந்நிலையில் இவா் கடந்த 31.10.2019-இல் அதே கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாா். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்றப் பிணையில் மணிகண்டன் வெளியே வந்தாா்.
இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி, மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, அதைச் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா். இதையடுத்து மணிகண்டனை போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இவ் வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுந்தரராஜன் ஆஜரானாா்.