போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து கைதான இளைஞருக்கு போக்சோ வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சின்னமணி நகரைச் சோ்ந்த ப. யோகபிரகாஷ் (28) என்பவா் கடந்த 2017 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் ஆமூா் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயதுச் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாராம்.
இதுகுறித்து அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து, யோகபிரகாஷை கைது செய்தனா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் யோகபிரகாஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா்.
இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா, நீதிமன்ற காவலா் பிரியங்கா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரெத்தினம் வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.