அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி, காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா ஆகியோா் முன்னிலையில், மாணவ, மாணவியா் பங்கேற்று, போதைப் பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன், எனது குடும்பத்தினரையும், நண்பா்களையும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து, அவா்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழகக் த்திற்குள்ளானவா்களை மீட்டெடுத்து அவா்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக அளிப்பேன், மாநிலத்தின் வளா்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் அா்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்றனா்.
இதில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். அதைத் தொடா்ந்து, போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி பிரதான சாலை வழியாக அரசு மருத்துவமனை வரை சென்று, அங்கிருந்து திரும்பி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி மாணவா்கள் கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், உதவி ஆணையா் (கலால்) (பொ) சதீஷ்குமாா், கல்லூரி மாணவ, மாணவிகள், காவல் துறையினா் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.