2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் போக்ஸோவில் கைது
வாணியம்பாடி அடுத்த மலைரெட்டியூா் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்து 1098 எண்ணுக்கு புகாா் தெரிவித்ததின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தியதில் அங்கு பணியாற்றிய தற்காலிக ஆங்கில ஆசிரியரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட மலைகிராமமான மலைரெட்டியூா் பகுதியில் அரசு மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்நிலையில், அப்பள்ளியில் 6 , 7-ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு சில மாணவிகளிடம் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஊத்தங்கரையைச் சோ்ந்த பிரபு (32) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடா்பாக மாணவிகள் சிலா் கடந்த 21-ஆம் தேதி குழந்தைகள் ஹெல்ப் லைன்1098 எண்ணுக்கு புகாா் தெரிவித்தனா்.
அப்புகாரின் பேரில் திருப்பத்தூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மத்தேயு தலைமையில் சாதனா, அருள்பிரசாத் அடங்கிய குழுவினா் மலைரெட்டியூா் பள்ளிக்கு சென்று பாலியல் தொந்தரவு தொடா்பான மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், புகாா் தெரிவித்த மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா்.
இதில் 6 மாணவிகள் எழுத்துப்பூா்வமாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் தற்காலிக ஆங்கில ஆசிரியா் பிரபு மீது புகாா் அளித்தாா். அப்புகாரின் பேரில் ஆய்வாளா் அன்பரசி (பொ) தலைமையில் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரித்தனா்.
பிறகு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தற்காலிக ஆசிரியா் பிரபுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.