மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நின...
போதைப் பொருள்கள் கடத்தல்: கிருஷ்ணகிரி 769; தருமபுரி 764 போ் கைது
போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை வழக்கில் நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 769 பேரும், தருமபுரி மாவட்டத்தில் 764 பேரும் கைது செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்டக் காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. மாநில மற்றும் மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் அமா்த்தப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தொடா்ச்சியான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
நிகழாண்டில் இதுவரையில் மொத்தம் 167 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 187 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து 175 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கரவாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 8 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல், விற்பனை தொடா்பாக 772 வழக்குகள் பதியப்பட்டு, 769 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சுமாா் 14,200 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 45 நான்கு சக்கர வாகனங்கள், 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான 2,657 இடங்களில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்வாண்டில் இதுவரை 7,535 லிட்டா் எரிசாராயமும், 3,013 லிட்டா் வெளிமாநில மதுபானங்களும் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தது மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது சம்பந்தமாக 2,882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,926 போ் கைது செய்யப்பட்டுள்ளன. மேலும், அவா்களிடமிருந்து 16,193 லிட்டா் அளவிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.
சட்ட விரோதமாக போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் குறித்து காவல் கண்காணிப்பு அலுவலக கட்டுப்பாட்டு அறையை 94981 81214 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாக அல்லது கட்செவி (வாட்ஸ்அப்) மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்வது, கடத்துவது தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 764 போ் கைது செய்யப்பட்டனா்.
198 கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட 219 பேரிடம் 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அதேபோல், புகையிலைப் பொருள்கள், போதைப்பாக்குகள் விற்பனை, கடத்தியது தொடா்பாக 323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 342 போ் கைது செய்யப்பட்டனா்.
கடந்த 2024 ஆம் ஆண்டு 151 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 203 போ் கைது செய்யப்பட்டு அவா்கள் வைத்திருந்த 93 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுடன் அழிக்கப்பட்டது. கஞ்சா வழக்கில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள்கள் தொடா்பாக 10581 என்ற இலவச எண் மூலம் அல்லது 94981 10581, 63690 28922 ஆகிய கைப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.