வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்த...
போப் உயிருக்கு ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டார்! - வாடிகன்
ரோம் : போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து படிப்படியாக நலம்பெற்று வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் பிப். 23 மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு மார்ச் 3 மூச்சு விடுவதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பு அதிகரித்ததையும் தொடர்ந்து மீண்டும் வெண்டிலேட்டர் மாற்றப்பட்டு அதன் உதவியுடன் அவர் சுவாசித்ததாக வாடிகன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, போப் உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் திங்கள்கிழமை(மார்ச் 10) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிருக்கு ஆபத்தான கட்டத்திலிருந்து அவர் மீண்டுவிட்டார் என்றும், எனினும், அவர் இன்னும் பல நாள்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெறுவது அவசியமென்றும் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் இயற்கையாக சுவாசிக்க சிரமப்படுவது தொடருவதால், மூக்கின் வழியே குழாய் பொருத்தப்பட்டு அவருக்கு தேவையான ஆக்ஸிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இரவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும், எனினும், நன்றாக தூங்கி ஓய்வெடுப்பதால் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.