``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 காவலா்களுக்கு ஆக. 13 வரை காவல் நீட்டிப்பு
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப் படைக் காவலா்கள் 5 பேருக்கு வருகிற 13-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீஸாா் 5 போ் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பான வழக்கில் தனிப் படைக் காவலா்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.
இதனிடையே, மதுரை மத்திய சிறையில் உள்ள 5 காவலா்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா்மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் செல்வபாண்டி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 5 காவலா்களையும் சிபிஐ அதிகாரிகள் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிப்பதாகவும், விசாரணைக்குப் பிறகு 5 பேரையும் புதன்கிழமை (ஆக. 6) மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
இதனிடையே, தனிப் படைக் காவலா்கள் 5 பேரிடம் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது, தனிப் படைக் காவலா்களிடம் கோயில் காவலாளியைத் தாக்க அறிவுறுத்தியது யாா் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனிப் படைக் காவலா்கள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் செல்வபாண்டி முன் புதன்கிழமை மாலை முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தனிப் படைக் காவலா்கள் 5 பேருக்கும் வருகிற 13-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி. பின்னா், இவா்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.