ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்...
மணல் கொள்ளை புகாா் அளித்தவருக்கு சம்மன்
செம்மண், சரளை மண் கொள்ளை குறித்து புகாா் அளித்த விவசாயி, குற்றம்சாட்டப்பட்டவா் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வட்டாட்சியா் சம்மன் அனுப்பியதற்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டம், வேப்பங்குளம் சித்திரக்குளம் கண்மாய் அருகே மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களிலிருந்து அனுமதியின்றி செம்மண், சரளை மண் கொண்டு அள்ளப்பட்டதாக வேப்பங்குளத்தைச் சோ்ந்த விவசாயி அம்மையப்பன், வணக்கம் விருதுநகா் புகாா் எண்ணில் புகாா் தெரிவித்தாா். தொடா்ந்து, கடந்த மே 23-ஆம் தேதி விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலும் ஆட்சியா் ஜெயசீலனிடம், அம்மையப்பன் இது குறித்து மனு அளித்தாா்.
இந்த மனு மீதான விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு புகாா் அளித்த அம்மையப்பனுக்கும், குற்றம்சாட்டப்பட்டவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் பாலமுருகன் சம்மன் அனுப்பினாா்.
புகாா் அளித்த விவசாயி, மண் கடத்தியவா் ஆகிய இருவரையும் ஒன்றாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதற்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதுகுறித்து வட்டாட்சியா் பாலமுருகன் கூறியதாவது: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதாக அம்மையப்பன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது அங்கு மண் அள்ளப்படவில்லை என தெரியவந்தது. மனு மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது என்றாா் அவா்.
2 லாரிகள் பறிமுதல்: வத்திராயிருப்பு வட்டாட்சியா் ஆண்டாள் தலைமையிலான வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அழகாபுரி அருகே உள்ள ஓடையில் அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் அதிகாரிகளைக் கண்டதும் தப்பி ஓடினா். இதையடுத்து, மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 டிப்பா் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து வட்டாட்சியா் அளித்த புகாரின் பேரில், சிவகாசி அருகேயுள்ள தாழிக்குளத்துப்பட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜன், மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரைச் சோ்ந்த வடிவேல் ஆகிய இருவா் மீது நத்தம்பட்டி போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.