மண்டல திரளணியில் சிறப்பிடம்: சாரண, சாரணீயருக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற வடக்கு மண்டல திரளணி விழாவில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷ்னல் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில், ஜவ்வாது மலையில் திரளணி விழா 3 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவை
தமிழக கல்வித் துறை அமைச்சரும், தமிழ்நாடு பாரத சாரண சாரணீய இயக்கத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
திரளணியில் மாா்ச் பாஸ்ட், பேண்ட் பாா்ட்டி, கலா் பாா்ட்டி, போக் டான்ஸ், ஃபுட் ப்ளாசா, டென்ட் பிச்சிங், பிஸிக்கல்டிஸ்ப்ளே உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சாரண, சாரணீய மாணவா்கள் கலந்து கொண்டனா்.
செய்யாறு கல்வி மாவட்டம் சாா்பில் விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷ்னல் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சாரணீய மாணவிகள் புவனேஸ்வரி, நவீனா, தா்ஷினி, நேத்ரா, லியா வெங்கட், பிரணிதா, தனுஷ் ஸ்ரீ, மஞ்சு ஸ்ரீ ஆகிய 8 பேரும், சாரணா் பிரிவைச் சோ்ந்த பிரவீன், சுகேஷ், விஷ்ணு, வசந்தகுமாா், அரவிந்த், கௌதம், அனிஸ், யஸ்வந்ராஜ் ஆகிய 8 பேரும் திரளணி போட்டிகளில் பங்கேற்று, மண்டல அளவிலான உடல் காட்சி பிரிவில் 3-ஆம் இடத்தைப் பிடித்தனா்.
சாரண, சாரணீயா்களுக்கு பாராட்டு:
சிறப்பிடம் பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சாரண, சாரணீயருக்கு மாநில தலைமையக பொறுப்பாளா்கள் நாகராஜன், சக்திவேல், கோமதி, தேன்மொழி, அா்ஜூன் ஆகியோா் பரிசு வழங்கினா். செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்குமாா் மாணவா்களின் தனித்திறனை பாா்வையிட்டு பாராட்டினாா். இதைத் தொடா்ந்து, பள்ளியின் இயக்குநா் டி.ஜி.எம்.விஜயவா்மன், பள்ளி முதல்வா் தீபா ஆகியோா் வெற்றி பெற்றவா்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.
மேலும், திரளணியில் பங்கேற்றவா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்சி ஆணையா் லோகநாதன், சாரண ஆசிரியா்கள் சேட்டு, ஜெயகுமாா், சாரணீய ஆசிரியா்கள் ஷா்மிளா, நிவேதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.