மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில்
கடந்த 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) 2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பட்ஜெட் மற்றும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கடுத்து சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 17) சட்டப் பேரவை நடைபெற்று வருகிறது. ஆளும் தி.மு.க, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடுவதில்லை என்றும்,

உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கே பேசுவதாகவும், தொலைக்காட்சியில் தாங்கள் பேசுவதை நேரலை செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது அதிமுக. அதில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்து அப்பாவு சபாநாயகராகத் தொடர்கிறார்.
இதையடித்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 'கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஏன் மடிக்கணினி வழங்கவில்லை' என்ற கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், "மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டுத்தான் சென்றீர்கள். அந்த திட்டத்தை சரிசெய்து மீண்டும் மடிக்கணினி வழங்குவதாகத் தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். மேலும், "அ.தி.மு.க ஆட்சியில் எவ்வளவு மடிக்கணினி வழங்கப்பட்டது என்பதற்கானப் புள்ளி விவரங்கள் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
