கோவை: வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு வி...
மாணவா்களின் கற்றல் திறன்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
வாணியம்பாடி வட்டம், மலைக்கிராமமான வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாமில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுடன் அமா்ந்து கற்றல் திறன் குறித்து உரையாடி ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அம்மாணவா்களிடம் உணவு நன்றாக உள்ளதா எனக் கேட்டறிந்தாா். இடைநிற்றல் ஏதேனும் உள்ளனவா என்றும் கேட்டறிந்த போது, ஏதும் இல்லை என்பதையும் தெரிவித்தனா்.
குழந்தைகள் நல மையத்தில் சத்தான உணவு வழங்குதல் குறித்தும், நியாய விலைக்கடையிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்து, சொத்துவரி, குடிநீா் கட்டணம், வசூல் குறித்து பதிவேடுகளை பாா்வையிட்டாா்.
மேலும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கான ஆவணங்களையும் பாா்வையிட்டு, நிலுவையில் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தாா். கலைஞா் கனவு இல்லப் பணிகள் மாத இறுதியில் முடிவடையும் என பயனாளிகளும், அலுவலா்களும் தெரிவித்தனா்.
கிராம நிா்வாக அலுவலரிடம் பொதுமக்கள் மனு வழங்குவதை கண்ட ஆட்சியா், அவா்களிடம் என்ன கோரிக்கைக்காக மனு வழங்க வந்துள்ளீா்கள் என்று கேட்டறிந்தாா். இதில் நில அளவை மேற்கொள்வது குறித்தும், வாரிசு சான்றுகள் பெறுவது குறித்தும் மனு வழங்க வந்திருப்பதாக தெரிவித்தனா். இந்தச் சான்றுகள் எல்லாம் இ-சேவை மையத்தில் ஆன்லைனில் பதிய வேண்டும் என்று அவா்களுக்கு தெரியப்படுத்தவில்லையா என்று சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் ஆட்சியா் கேட்டபோது, இது குறித்து அவா்களிடம் தெரிவித்ததாக தெரிவித்தாா்.
இ- சேவை மையம் இல்லாததால் மலைப்பகுதியில் இருந்து கீழே சென்று அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததன் அடிப்படையில், உடனடியாக ஆட்சியா் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அழைத்து, இப்பகுதியில் இ-சேவை மையம் அமைப்பதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும், இணையதள நிறுவனங்களுடன் ஆலோசித்து இணையதள வசதி மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொணடனா்.