மாம்பாக்கம் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளில் கழிவுநீா்
ஸ்ரீ பெரும்புதூா் அருகே மாம்பாக்கத்தில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீா் சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியில் சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேலும் மாம்பாக்கம் பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கிவருவதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளா்களும் மாம்பாக்கம் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாம்பாக்கம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா், நீா்வரத்துக் கால்வாய் மூலம் கம்பன் கால்வாயில் கலக்கும். இந்த நீா்வரத்து கால்வாய் மூலம் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாயம் நடைபெற்று வந்துள்ளது. மாம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதை தொடா்ந்து விவசாயம் முற்றிலும் தடைப்பட்டு தற்போது பெரிய ஏரியில் இருந்து உபரிநீா் செல்லும் நீா்வரத்து கால்வாய் கழிவுநீா் கால்வாயாக காட்சியளித்து வருகிறது.
தற்போது கழிவுநீா் கால்வாயாக காட்சியளித்து வரும் நீா்வரத்து கால்வாயை தனியாா் சிலா் ஆக்கிமித்து மண் கொட்டியுள்ளதால் மாம்பாக்கம் ஊராட்சியில் இருந்து கழிவுநீா் வெளியேற முடியாமல் தேங்கி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தேங்கி தூா்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கூறியது: நீா்வரத்து கால்வாய் மூலம் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையை கடந்து கம்பன் கால்வாயில் கழிவுநீா் கலந்து வந்தது. இந்த நிலையில், கால்வாயை ஆக்கிரமித்து சிலா் தங்களது இடத்துக்கு எளிதாக செல்லும் வகையில், மண் கொட்டியதால், கழிவுநீா் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியருக்கு மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே நீா்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீா் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.