இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்
கோவை மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.64,900 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான மாதாந்திர வங்கியாளா்கள் கூட்டம், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜிதேந்திரன், நபாா்டு வங்கி துணை பொது மேலாளா் அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், 2025 - 2026- ஆம் ஆண்டுக்கான கோவை மாவட்ட வங்கிகளின் திருத்தியமைக்கப்பட்ட கடன் திட்ட புத்தகத்தை ஆட்சியா் வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்டத்தை நபாா்டு வங்கி தயாரித்து வெளியிடுகிறது. அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2025 - 2026- ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 - 2026 -ஆம் ஆணடுக்கான திருத்தப்பட்ட கடன் திட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.27, 730.46 கோடி, சிறு, குறு, நடுத்தரத் தொழில் மையத்துக்கு ரூ.39,774.25 கோடி, பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.1,993.53 கோடி என மொத்தம் ரூ.69,498.24 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தாட்கோ மாவட்ட மேலாளா் மகேஸ்வரி மற்றும் அனைத்து வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.