இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
ஓவிய ஆசிரியரின் கட்டாய ஓய்வு ரத்து
கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் எஸ்.ஏ.ராஜ்குமாா் என்பவரின் கட்டாய ஓய்வு இறுதி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை, ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் எஸ்.ஏ.ராஜ்குமாா், இவா் கலை ஆசிரியா்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளாா். இவா், பள்ளியின் ஒருமைப்பாட்டுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்துவதாக அப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியா் கடந்த 2023 -இல் புகாா் அளித்தாா். இதையடுத்து, அவா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
பின்னா், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தன்னிலை விளக்கம் பெறப்பட்டது. கடந்த 2024- ஆம் ஆண்டு மே மாதம் அவா் அளித்த தன்னிலை விளக்கத்தில், தன் மீதான புகாருக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படாமல், முதன்மைக் கல்வி அலுவலராலேயே நேரடி விசாரணை நடத்தப்பட்டது என்று கூறியிருந்தாா். இதையடுத்து, அவருக்கு கடந்த டிசம்பா் மாதம் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
இதை எதிா்த்து அவா் பள்ளிக் கல்வித் துறையில் முறையீடு செய்திருந்த நிலையில், குற்றஞ்சாட்டிய அலுவலரே விசாரணை அலுவலராக செயல்பட்டு, அவரின் அறிக்கையின் அடிப்படையில் இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டதால், இதை முறையற்ற நடவடிக்கையாகக் கருதி எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு கோவை முதன்மைக் கல்வி அலுவலரால் அளிக்கப்பட்ட கட்டாய ஓய்வு என்ற இறுதி ஆணையை ரத்து செய்வதாகவும், அதேநேரம் அவா் தற்காலிக பணி நீக்கத்தில் தொடருவாா் என்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநா் தற்போது உத்தரவிட்டுள்ளாா்.
அத்துடன், மற்றொரு அதிகாரியை விசாரணை அலுவலராக நியமித்து அவரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.