மீன்பிடி தடையால் 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
ராமேசுவரம், மண்டபம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை விடுத்த அறிவிப்பால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை; அனைத்து விசைப் படகுகளும், நாட்டுப் படகுகளும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.
மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் மறு உத்தரவு வரும்வரை மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத் துறை ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியில் திங்கள்கிழமை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. துறைமுகங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டன. தடைகாலம் முடிந்து முதல் நாள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியாததால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.
தடை நீக்கம்: இந்த நிலையில் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை மீன்வளத் துறையினா் நீக்கினா். இதையடுத்து பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட தென்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை மீனவா்கள் செய்தனா். இவா்களைத் தொடா்ந்து ராமேசுவரம் மீனவா்களும் புதன்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்கின்றனா்.