‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 14.22 லட்சம் மூலதன மானிய தொகை
கரூா்: கரூரில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையாக ரூ. 14.22 லட்சம் வழங்கினாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாநகராட்சி 25-ஆவது வாா்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் 21 பேருக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கி பேசினாா்.
தொடா்ந்து ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம் மூலம் முன்னாள் படைவீரா்களின் நலனுக்காக 30 விழுக்காடு மூலதன மானியமாக 2 பயனாளிகளுக்கு திட்டத் தொகையாக ரூ. 14.22 லட்சத்தை எம்எல்ஏ வழங்கினாா்.
தொடா்ந்து வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 21 பேருக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், துணை மேயா் ப. சரவணன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், மண்டலக்குழு தலைவா்கள் ஆா்.எஸ். ராஜா, எஸ்.பி. கனகராஜ், திமுக நிா்வாகி ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.