முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகள்: மக்கள் அவதி
முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக்கிய பிராதன சாலை சந்திப்பு பகுதிகளான முள்ளங்கனாவிளை, இடையன்கோட்டை, எட்டணி,முச்சந்தி ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.
குறிப்பாக, 1ஆவது வாா்டு பகுதியான மலவிளை, பண்டாரவிளை, கோனான்விளை, கிழக்கேவிளை, ஆவா்விளை, மருதவிளை உள்ளிட்ட குக்கிராமங்களிலும், 2வது வாா்டிலுள்ள மயில்பறம்பு விளை, சத்திவிளை, அங்கோட்டுவிளை, கோட்டவிளை ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியவில்லை.
இதனால் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து, கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும், மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவவூராட்சி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.