மெக்காவுக்குச் சென்ற முகமது சிராஜ்..!
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புனிதப் பயணமாக மெக்காவுக்குச் சென்றுள்ளார்.
கடந்த இரவு முகமது சிராஜ் சம்சாபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய விமான நிலையத்தில் இருந்து மெக்கா புறப்பட்டதாக விடியோ வெளியாகியுள்ளது.
தனது இன்ஸ்டா பக்கத்தில் இதை உறுதிசெய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிராஜ். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஒவ்வொரு இஸ்லாமியரும் செல்ல வேண்டும் என்பது அந்த மார்க்கம் வலியுறுத்தும் கடமைகளில் ஒன்றாகும். அதன்படி, ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் புனிதப் பயணம் சிராஜுக்கு முதல் முறையல்ல. ஏற்கனவே, 2019இல் குடும்பத்தினருடன் மெக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடியான நிலையில் சிராஜ்
ஐபிஎல் 2025க்கு முன்பாக ரமலான் வரவிருப்பதால் இந்தப் புனிதப் பயணத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.
30 வயதாகும் சிராஜ் தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் கடுமையான காலகட்டத்தில் இருக்கிறார்.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பிஜிடி தொடரில் சுமாரான செயல்பாடுகளால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் தேர்வாகவில்லை. ஏற்கனவே பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணிக்கு இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பிஜிடி தொடரில் 10 இன்னிங்ஸில் 20 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் இல்லாதது மட்டுமில்லாமல் ஆர்சிபி அணியும் இவரை அணியில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.