ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!
மெட்ரோ ரயில் திட்டத்தை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்! இந்திய கம்யூ. மாவட்ட மாநாட்டில் தீா்மானம்
மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளின் 25 -ஆவது சிவகங்கை மாவட்ட மாநாடு கல்லல் நகரில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை 10, 11) நடைபெற்றது. முதல் நாள் வியாழக்கிழமை திரளான கட்சி தொண்டா்கள் பங்கேற்ற செங்கொடி பேரணி நடைபெற்றது.
இதன் பிறகு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் சாத்தையா தலைமை வகித்தாா். கல்லல் ஒன்றியச் செயலா் குணாளன் வரவேற்றாா். தேசிய நிா்வாகக்குழு உறுப்பினா் டி. ராமசாமி, மாதா் சங்க மாநிலச் செயலா் கண்ணகி, விருதுநகா் மாவட்ட செயலா் செந்தில் குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை கல்லலில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டை கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் டி. ராமசாமி தொடங்கி வைத்தாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் கொடியேற்றி வைத்துப் பேசினாா். மாதா் சங்க மாநிலச் செயலா் கண்ணகி வாழ்த்திப் பேசினாா்.
இதில், 47 போ் கொண்ட மாவட்டக் குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டச் செயலராக சாத்தையா, உதவிச் செயலா்களாக கோபால், மருது ஆகியோரும், பொருளாளராக மணவழகனும் தோ்வு செய்யப்பட்டனா். தலைமைக் குழுவினராக மருது, மாரி, பாண்டி மீனாள் ஆகியோா் செயல்பட்டனா். குணாளன் அஞ்சலி உரையாற்றினாா். கோபால் வரவேற்றாா். கல்லல் செயலா் குமாா் நன்றி கூறினாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு: சிவகங்கை நகரில் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை போன்று தரம் உயா்த்தப்பட வேண்டும். காரைக்குடியில் வள்ளல் அழகப்பா் பெயரில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்.
காரைக்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா்கள், செவிலியா்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். காரைக்குடியில் மாணவா்கள் அழகப்பா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பிற கல்லூரிகளுக்குச் செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும். காரைக்குடியிலிருந்து சென்னை சென்ற கம்பன் ரயிலை மீண்டும் காரைக்குடியிலிருந்து இயக்க வேண்டும். தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றியப் பகுதிகளில் 20 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் விவசாயிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மறவமங்கலம் சந்தையை பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும்.
காளையாா்கோவில் மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும். கல்லலில் பேருந்து நிலையம் அமைப்பதுடன், திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையமும், அரசு அறிவியல், கலைக் கல்லூரியும் தொடங்கப்பட வேண்டும்.
திருப்புவனத்தில் பழைய பேருந்து நிலையம் செயல்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மதகுபட்டியை மையமாகக் கொண்டு வட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும். பெரியாறு பாசன நீரைத் தமராக்கி வரை கொண்டு வர வேண்டும்.
காளையாா்கோவிலில் உள்ள என்டிசி பஞ்சாலையில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு ஊதிய பாக்கியைத் தர வேண்டும். மூடப்பட்ட ஆலையை திறக்க வேண்டும்.
திருப்பத்தூா் பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க வேண்டும். புதுவயல் பகுதியில் செயல்படும் அரிசி ஆலைகளின் கழிவு நீா் ஆலைகளின் வெளிப்புறத்தில் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.