மெஸ்ஸி-நெய்மர் தருணங்கள்..! பிரேசில் வீரரின் தகாத பேச்சுக்கு ஆர்ஜென்டீன பயிற்சியாளர் பதில்!
பிரேசில் வீரர் ரபீனியாவின் ஆபாசமான பேச்சுக்கு ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி பொறுமையான பதிலைக் கூறியுள்ளார்.
நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம் என பிரேசிலின் நட்சத்திர வீரர் ரபீனியா தெரிவித்துள்ளார்.
அதுமட்டும் கூறியிருந்தால் பிரச்னை இல்லை அத்துடன் ஆங்கில எழுத்து எஃப்-இல் தொடங்கும் ஆபாச வார்த்தையில் பேசியது கால்பந்து உலகில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போட்டிக்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில் இதற்கு ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி பேசியதாவது:
ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் பேசியதென்ன?
இது ஆர்ஜென்டீனா, பிரேசிலுக்கான போட்டி. எப்போதுமே முக்கியமானது. ஆனால், இது வெறுமனே கால்பந்து போட்டி மட்டுமே.
2021 கோபா அமெரிக்கா போட்டிக்குப் பிறகு மரக்கானா திடலின் படிகளில் நெய்மரின் பக்கத்தில் மெஸ்ஸி அமர்ந்திருக்கும் படம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதுதான் எங்களுக்கு எப்போதும் நினைவிருக்கும்.
உலகின் சிறந்த வீரர், அநேகமாக 2ஆவது சிறந்த வீரர். இருவரும் நல்ல நண்பர்கள். அதைத்தான் நாங்கள் மனதில் வைத்திருக்கிறோம்.
இது வெறுமனே கால்பந்து போட்டி மட்டுமே. 90 நிமிஷங்களில் யார் வெற்றி பெறுகிறோம் என்பதில் மட்டுமே கவனமாக இருப்போம். அதைத்தாண்டிச் செல்ல இதில் எதுவுமில்லை, தாண்டிப் போகவும் போகாது என்றார்.
மெஸ்ஸி, நெய்மர் இல்லை
ஆர்ஜென்டீனா சார்பில் மெஸ்ஸி, பிரேசில் சார்பில் ரபீனியா இருவருமே காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை (மார்ச்.26) காலை 5.30 மணிக்கு ஆர்ஜென்டீனா, பிரேசில் அணிக்கு இந்தப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
இதில் தென்னமரிக்க கால்பந்து தகுதித் தேர்வு பட்டியலில் ஆர்ஜென்டீனா அணி 28 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பிரேசில் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.