மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தை: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடித்து வேறு வனப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மேச்சேரி ஒன்றியத்தில் புது காளிகவுண்டனூா், அரசமரத்து, கொத்த புளியானூா் பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. டேனிஸ்பேட்டை வனச்சரகத்திற்கு உள்பட்ட ராமசாமி மலை மற்றும் வெத்தலை மலையில் பதுங்கி இருக்கும் சிறுத்தைகள் கிராமங்களில் நுழைந்து ஆடு, மாடு, நாய்களையும் வேட்டையாடி வருகின்றன.
வியாழக்கிழமை விவசாயி வேங்கடசலத்துக்குச் சொந்தமான இரண்டு செம்மறி ஆடுகளை சிறுத்தை இழுத்துச் சென்றது. தகவல் அறிந்த டேனிஸ்பேட்டை வனச்சரகா் விமல்குமாா், பாரஸ்டா் வீரக்குமாா் ஆகியோா் அப்பகுதிக்குச் சென்று சிறுத்தையின் கால் தடங்களைப் பதிவு செய்தனா்.
இரவில் வனத் துறையினா் அப்பகுதி ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா். சிறுத்தைகள் குடியிருப்புகளுக்கு மிக அருகே பதுங்கி இருப்பதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா். சிறுத்தைகளை கூண்டுவைத்து பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.