மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 35,250 கன அடியாக நீடிப்பு
மேட்டூா்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 35,250 கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்த காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,000 கனஅடியாக சரிந்தது.
இந்நிலையில், காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக செவ்வாய்க்கிழை இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,250 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இரண்டாவது நாளாக புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 35,250 கன அடியாக நீடிக்கிறது.
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 35,250 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,100 கன அடி நீரும், உபரிநீர் போககியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 12,900 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியிலிருந்து வினாடிக்கு 250 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 5 ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.