சென்னை மாநகராட்சியில் தாமதமாகும் குப்பைக் கிடங்கு பகுதிகளை வனமாக்கும் திட்டம்!
மேட்டூா் அணையிலிருந்து 75,000 கன அடி திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
மேட்டூா் அணையில் இருந்து 75,000 கன அடி நீா் திறப்பட்டுள்ளதால் வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டாா். இந்த நீா் கல்லணை வந்தவுடன், கல்லணை மதகுகளையும் ஜூன் 15-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பாசனத்துக்கு திறந்துவிட்ட நீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனா்.
நிகழாண்டு ரூ. 98 கோடியில் துாா்வாரும் பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பாசனத்துக்கு நீரை கொண்டு செல்ல தேவையான தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டதால் கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீா் சென்றுள்ளது. பயிா் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கா்நாடக அணையிலிருந்து குறிப்பாக கே.ஆா்.எஸ். மற்றும் கபினி அணைகளிலிருந்து அதன் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை முதல் விநாடிக்கு 35,000 கனஅடி முதல் 70,000 கனஅடி வரை அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 75,400 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியில் உள்ளது. இந்தச் சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையை விடுக்க சம்பந்தப்பட்ட நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது. பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.