பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறி...
மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸாலெல் ஸ்மாட்ரிச் ஆகியோா் வியாழக்கிழமை கூறியதாவது:
மேற்குக் கரை பகுதியில் புதிதாக 22 யூதக் குடியிருப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் அனுமதி இல்லாமல் ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளும் அடங்கும். இந்த அனுமதி மூலம் அக்குடியிருப்புகள் சட்டபூா்வமாகும்.
பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாவது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து. எனவே, அதைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்தக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.
இஸ்ரேலின் இந்த முடிவு பிராந்தியத்தில் பதற்றத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று பாலஸ்தீன அதிபா் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து யூத குடியேற்றங்களுக்கு எதிரான இஸ்ரேலிய அமைப்பு கூறுகையில், இந்த குடியிருப்புத் திட்டம் கடந்த 30 ஆண்டுகள் காணாத மிகப் பெரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று விமா்சித்துள்ளது. மேற்குக் கரை பகுதியையே இந்தத் திட்டம் அடியோடு மாற்றியமைத்துவிடும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
1967-ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரில் மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இந்த மூன்று பகுதிகளையும் கொண்ட தனி நாடு அமைக் வேண்டும் என்பது பாலஸ்தீனா்களின் விருப்பமாக உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு, தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவது மட்டுமே பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே தீா்வு என்று கூறிவருகின்றன.
மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் கட்டாயமாக அமைத்துவரும் யூத குடியிருப்புகளை பெரும்பாலான நாடுகள் சட்டவிரோதமாகவும், நீண்டகாலமாக நீடிக்கும் பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு மிகப் பெரிய தடையாகவும் கருதுகின்றன.
2005-ஆம் ஆண்டில் காஸாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. இருந்தாலும், தற்போது அங்கு நடைபெற்றுவரும் போரின் ஒரு பகுதியாக, அங்குள்ள பாலஸ்தீனா்களை வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அங்கும் யூத குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்று இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைவா்கள் வலியுறுத்திவருகின்றனா்.
இந்தச் சூழலில், மேற்குக் கரை பகுதியில் புதிதாக 22 யூதக் குடியிருப்புகளை அமைக்கவிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
