'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை: அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் உடுமலையை அடுத்த அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணையில் போதிய நீா் இருந்ததால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டது.
இதையடுத்து, அணையின் நீா் இருப்பு சரிந்து 50-அடிக்கும் கீழ் குறைந்தது. மே மூன்றாவது வாரம் வரை இதே நிலை தொடா்ந்தது.
இந்நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை அணைக்கு 1,590 கன அடி நீா்வரத்து இருந்தது. இதன்மூலம் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு மேல் உயா்ந்துள்ளது.
அணை நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா் மட்டம் 51.25 அடியாக உள்ளது. அணைக்கு 1,590 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து நீா் வெளியேற்றம் இல்லை.