பாகிஸ்தானில் தங்கியிருந்த யூடியூபா் சென்னை விமான நிலையத்தில் கைது: என்ஐஏ அதிகாரி...
மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து! ஏன்?
பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் இருந்து காணொலி காட்சி மூலம் சிக்கிம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.
இதற்காக சிக்கிமின் கேங்டாக்கில் மிகப்பெரிய அளவில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்வு ஒரு மணிநேரம் முன்னதாக காலை 10 மணிக்கே தொடங்கும் என்று சற்றுமுன் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திடீரென்று பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்படுவதாகவும், மக்கள் மத்தியில் மேற்கு வங்கத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாலைகளில் கூடியிருந்த சிக்கிம் மக்களும் பாஜக தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காணொலி மூலம் சிக்கிம் 50 ஆண்டுகள் விழாவில் மோடி கலந்துகொண்டுள்ளார்.
இந்த விழாவில், நம்சி மாவட்டத்தில் ரூ. 750 கோடி மதிப்பில் 500 படுக்கையுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை, சங்கச்சோலிங் பகுதியில் பயணிகள் ரோப் வழி, காங்டாக் மாவட்டத்திலுள்ள சங்கோலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜபேயி சிலை உள்ளிட்டவை மோடி திறந்துவைக்கிறார்.
தொடர்ந்து, மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேச நிகழ்வுகளில் கலந்துகொண்டு ரூ. 70,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.